திங்கள், 19 டிசம்பர், 2011

யாழில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி: இமெல்டா சுகுமார்

யாழ் மாவட்டத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய இடத்தில், இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தம் முடிவடைந்தும் இன்று மக்கள் மிகவும் அசௌகரியமான நிலையில் விரக்தியோடு இருக்கின்றார்கள். இதுவரை காலமும் பாரிய உயிரிழப்புக்கள், பொருள் இழப்புக்கள் என்பவற்றைச் சந்தித்தும் குடும்பங்கள் பிரிவுபட்ட நிலையில், வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எமது யாழ். மாவட்டம் போரிற்கு பின்னரான தற்போதைய காலத்தில் கலாச்சார விடயங்களில் கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என விமர்சிக்காமல், இத்தகைய விமர்சனங்களை செய்வோர்  யுத்த காலத்தினை அடுத்து வாழ்வாதாரமற்று வாழும் 50,000 மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் காலத்தை அடுத்து எந்த ஒரு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையே எமது மக்களும் எதிர்நோக்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup

கூட்டமைப்பு- அரசாங்கம் 18ஆம் சுற்று பேச்சு இன்று

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை (19.12.2011) இடம்பெறவுள்ளது.

17 சுற்றுகளும் வெறும் பேச்சுவார்த்தை களமாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 18வது சுற்றுப் பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டடத் தொகுதில் இடம்பெறவுள்ளது.

கடந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கான காணி அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

மனைவியின் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயற்சித்த நபர் கைது

தெல்தெனிய பிரதேசத்தில், மனைவியின் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியன் சேலாகே பாலித பண்டார என்ற 46 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி ஒருவருக்கு 500,000 ரூபாவிற்கு சிறுநீரகத்தை விற்பனை செய்ய குறித்த நபர் முயற்சி செய்துள்ளார். எனினும், சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கு அவரின் மனைவி மறுப்புத் தெரிவித்ததையிட்டு, ஆத்திரமுற்ற சந்தேக நபர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யதையடுத்து குறித்த நபரைப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுநீரகத்தை விற்பனை செய்வதன் மூலம் மகளின் நோய்களை குணப்படுத்தவும் வீட்டை கட்டி முடிக்கவும் முடிவும் என தெரிவித்து, சிறுநீரகத்தை விற்பனை செய்யுமாறு தம்மை பலவந்தப்படுத்தியதாக சந்தேக நபரின் மனைவி பொலிஸில் புகார் செய்துள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Content of Popup

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஐ.தே.க தலைமை பதவிக்கு நாளை தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நிர்ணயிப்பது குறித்த தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை (19.12.2011) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை கட்சித் தலைமைப் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக தற்போதைய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.

இதுதவிர, கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்காக கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க மற்றும் தற்போதைய இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் செயற்குழு உறுப்பினர் தயா கமகே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதேவேளை, கட்சியின் தவிசாளர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் போட்டியின்றி தீர்மானிக்கப்பட்டுள்ளதாககட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் தவிசாளராக காமினி ஜயவிக்ரம பெரேராவும், துணைத் தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் திஸ்ஸ அத்தநாயக்க செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup

சரத் பொன்சேகாவிற்கு பிறந்த நாள் கேக் வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிறந்த தினம் இன்றாகும்.பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் சரத் பொன்சேகாவை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

கட்சியின் இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை பார்வையிட்டுள்ளனர்.

பிறந்த நாளை முன்னிட்டு பாலித ரங்கே பண்டாரவும், பாலித தெவரப்பெருமவும் கேக் ஒன்றை சிறைச்சாலைக்கு எடுத்து சென்றிருந்தனர்.

எனினும், இந்த கேக்கை சரத் பொன்சேகாவிற்கு வழங்கக் கூடாது என சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Content of Popup

ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கைப் பிரஜை கைது

சுமார் 90 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்னையிலிருந்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கைப் பிரஜையான சந்தேகநபர் நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 350 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் கோதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கப்பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Content of Popup

இந்தியாவின் கைத்தொழில் நிறுவனங்களினால் இலங்கைக்கு பாதிப்பு

இந்தியாவின் பல்வேறு கைத்தொழில் நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் விஷ வாயுக்களினால் இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளியிடப்indiaபட்டுள்ளது.

ஹோர்டன் சமவெளி உள்ளிட்ட நாட்டின் மலைப் பிரதேசங்கள் மாசடைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்திற் கொண்டு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மண்டலம் விஷ வாயுக்களினால் நிரம்பியுள்ளதாக சபரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Content of Popup

தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

தமிழர்கள் வாய்டி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது.

வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது.

1. ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளை அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்களது முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் தார்மீகக் கடமையாகும்.

2. வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை.

பேச்சுகளில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

3. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயன் ஏதும் இல்லை.

4. தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டை கோருவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதன் அடிப்படையிலான தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமேயாயின் நாம் உண்மையான சுயாட்சியை பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும்.

இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தருவதோடு, இலங்கையில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், இவை பேரம் பேசும் பொருட்களும் அல்ல.

5. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாதது. பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. அழுத்தங்களுக்குப் பயந்து தமிழ்த் தேசியத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியாத பாழுக்குள் தள்ளக் கூடாது.

6. மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலே நாம் முன்னோக்கி நகர்வதற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.

7. மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதென கூட்டமைப்பு நிலைப்பாடாக பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் வலியுறுத்தும் தார்மீகக் கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.

8. கூட்டமைப்பு இன்னுமொரு தேர்தலில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டுமென்பதில்லை. இதனை மீறி தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது. மாற்று உபாயங்கள் குறித்து மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

9. தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் தேசிய அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பைக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சகல தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கி வருகிறார்கள்.

75 பேர் கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பம் கூட்டமைப்பின் கண்களைத் திறந்தாக வேண்டும்.

ஒரு பாரிய வரலாற்றுக் கடமையை தமிழ் மக்களின் சார்பில் சுமந்துள்ள கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் இந்த விண்ணப்பம் ஒரு ““துடுப்பாக'' அமையும் என்பதில் ஐயமில்லை. இதுவரை தனித்து நின்ற கூட்டமைப்பு இது போன்ற பல்வேறு தமிழ் சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணிக்க முன்வர வேண்டும்.

அரசாங்கத் தரப்பு கூட்டமைப்புக்கு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற காலம் இது.

வெற்றியின் மமதையிலான வார்த்தைகள் இன்னும் அரசாங்கத் தரப்பில் முடங்கிப் போகவும் இல்லை. முற்றுப் பெறவும் இல்லை. அரசாங்கத் தரப்பினரின் நாடாளுமன்ற உரைகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன.

உண்மையில் கூட்டமைப்புதான் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் சக்தி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் ““பேச்சுத் துணைக்கு'' கூட்டமைப்பு தான் தேவைப்படுகின்றது. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசியாக வேண்டும்.

அது மாத்திரமல்ல கடந்த ஒருவருட காலமாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் பேசியும் தீர்வு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் “சாட்சியங்கள் இல்லாத யுத்தமொன்று நடைபெற்றுள்ள நிலையில் உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே சரியான பாடங்களை கற்றுக் கொள்ள முடிவதுடன் நேர்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்'' என்ற உரையையடுத்து அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடும் தொனியில் உரையாற்றியுள்ளார்.

“உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா. பிரசன்னம் போன்ற விடயங்களை வரவேற்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுகளை பயன்பாடுடையதாக முன்னெடுக்க விரும்புகின்றதா அல்லது அதுவாக முறித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

“விசாரணைகளில் நம்பிக்கையில்லையென்றும் சர்வதேச விசாரணை தேவையென்றும்'' சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

“அதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. பிற நாடுகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டுப் பிரச்சினையை சர்வதேச பொலிஸாருக்கு கையளிக்க நாம் தயாரில்லை. சர்வதேச பொலிஸ் எமக்கு அவசியமில்லை'' என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பீரிஸ்.

ஒரு வருட பேச்சுவார்த்தையில் ஒன்றுமில்லை என்று சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் போட்டுடைத்தது அரசாங்கத் தரப்புக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஊட்டியிருக்கலாம்.

ஆனால் அதுதான் உண்மை.

இன விவகாரத் தீர்வுக்கு 13 ஐத் தருவோம். இதற்குமப்பால் 13 பிளஸ் தருவோம் என்று கூறிய அரசாங்கம் தான் இன்று 13 க்கே தயாராக இல்லையென்பதை ஒரு வருடமாக உணர்த்தி வருகின்றது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை தேவையா? என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

இந்த ஒரு நிலை உருவாகும் என்பதை எதிர்பார்த்தே இப்பத்தியில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

தற்பொழுது ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்புடன் அரசாங்கம் ஒருவருடமாக பேசியும் ஒன்றும் வெளிவரவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை.

அமைச்சரைப் பொறுத்து அரசாங்கத்தில் ஓர் அங்மாக இருப்பவர். தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பெறுபேறுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும்.

அமைச்சர் அவர்கள் கூறுவது போல் தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன என்பது உண்மையே. அரசுடன் இணைந்திருக்கும் அவருக்கு தீர்வு நோக்கிய காய்களை நகர்த்துவதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.

இந்த செல்வாக்கை பயன்படுத்தி தீர்வு நோக்கி பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வெற்றியே ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதிலும் தங்கியுள்ளது.

வி.தேவராஜ்




Content of Popup

சனி, 17 டிசம்பர், 2011

மட்டு களுவாஞ்சிகுடியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

மட்டு.; களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 11.30மணியளவில் களுவாஞ்சிகுடி,விநாயகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கே.சுதாகரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.சி.ஆரியரத்தின தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையினை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் துறைநீலாவணையில் உள்ள வீட்டுக்குச் சென்றபோதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

காரினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வேகமாக வந்த கன்டர் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வாகனத்தில் அடிப்பட்டு நீண்ட தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த சார்ஜன்ட் தர அதிகாரி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தர அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் தொடர்புடைய கன்டர் வாகனம் மற்றும் கார் சாரதிகளை கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup

வடக்கு கிழக்கு இணைப்பதால் எந்த நன்மையும் இல்லை: முதலமைச்சர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தை துண்டாக்குவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை( 17.12.2011)இடம்பெற்ற பெண்கள் வாழ்வாதார திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கெளுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் அற்றவர்களாகவே வாழ்ந்துவருகின்றார்கள். இன்று முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றது.கிழக்கின் தனி அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைப் பற்றிப் பேசப்போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

வடகிழக்கை இணைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதற்காக, இன்று கிழக்கு மாகாணத்தை துண்டு துண்டுகளாக்கி இங்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் புத்தி ஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைக்கப்படுவதால் எந்த நன்மையும் இல்லை. அதனை இங்கு யாரும் கோரவும் இல்லை. இங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது தெரிவியுங்கள், வடகிழக்கு இணைப்பதனால் முஸ்லிம் காங்கிரசுடன் பேசி என்ன திட்டத்தைக்கொண்டுவரவுள்ளீர்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று தெரிவியுங்கள்.

இங்கு ஒரு சமூகத்தின் நலன் என்று கூறி எமது சமூகத்தை அழிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களது பகுதிகளை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியும்.மூன்று இனங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் ஒற்றுமையாக தன்னிறைவுடன் வாழவே விரும்புகின்றோம். அதனை குழப்பி அரசியல் செய்ய யாரும் முனையக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாவதி பத்மராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

பகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை ரஷ்ய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், Times of Moscow எனும் பத்திரிகை எதிர்வரும் திங்கட்கிழமை சைபீரிய நீதிமன்றத்தால் பகவத்கீதை தொடர்பான இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் நோக்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Content of Popup

ஆலய தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

யாழ்ப்பாணம் அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலயத் தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தார் என சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் மூன்று வருடங்களின் பின் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் என்பவரே நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டவராவார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி அம்மன் ஆலயதேர் முட்டிக்குள் ஆயுதங்களையும், இராணுவச் சீருடைகளையும் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இவருக்கு எதிராக இரு இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.

எனினும், குறுக்கு விசாரணையில் மூன்று சாட்சிகளுக்குமிடையில் பல முரண்பாடுகள் தென்பட்டதை அடுத்து இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாத நிலையில், ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Content of Popup

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

ஹட்டன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 சந்தேகநபர்கள் இன்று (17.12.2011) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் - நோர்வூட் சாஞ்சிமலை பிரதேசத்திலே இவர்கள் சட்டவிரோத முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலிய மேலதிக பொலிஸ் அதிகாரியின் ஆலோசனையின்படி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரத்தினக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup

வாகன விபத்தில் நாளொன்றுக்கு 6 பேர் மரணம்: மோட்டார் போக்குவரத்துப் பிரிவு

இலங்கையில் நாளொன்றுக்கு 92 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதனால் ஆறு மரணங்கள் சம்பவிப்பதாகவும் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சேனக்க கமகே தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களினால் இந்த நாட்டுக்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா சொத்து நட்டம் ஏற்படுவதாகவும் இந்த நிலைமை நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களில் 85 வீதமானவை சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனத்தால் ஏற்படுவதாகவும், ஏனைய 15 வீதம் இயந்திர கோளாறுகளினால் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்தும் போது உறங்குதல், பிள்ளைகளை கொஞ்சுதல், உரையாடலில் ஈடுபடல், தொலைபேசி பேசுதல், மது அருந்துதல், உணவு உட்கொள்ளல் போன்ற காரணிகளினால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் இடம்பெறுகின்றது.

ஒரு வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படும் சந்தர்ப்பங்களினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு புள்ளி விபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Content of Popup

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணம்: ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Content of Popup

வெள்ளி, 16 டிசம்பர், 2011

துமிந்த சில்வாவுக்கு மூன்று மாத விடுமுறை

முல்லேரிய சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறையை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு துமிந்த சில்வாவிற்கு விடுமுறை வழங்கக் கோரிய கடிதத்தை அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றில் சமர்பித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையிலேயே, மூன்று மாத விடுமுறை வழங்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறைக்கான அங்கீகாரம் வழங்கியது.

Content of Popup

30 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்ட சோக நாடகம் முடிவடைந்துள்ளது – ஜனாதிபதி மகிந்த

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு வந்த சோக நாடகம் தற்போது முடிவடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“தாமரை தாடகம்” மகிந்த ராஜபக்ஸ கலையரங்கினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அழுது புலம்பி கவலைப்படும் யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் செழுமையை பிரதிபலிக்கும் நாடகங்களை அரங்கேற்றக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

நூறு ஆண்டுகள் கலைச் சேவை ஆற்றி வரும் டவர் அரங்கைப் போன்றே தாமரைத் தடாகம் அரங்கும் நாட்டு மக்களுக்கு அரிய கலைச் சேவைகளை ஆற்றும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களின் பௌதீக வாழ்க்கையை கட்டியெழுப்புதல் மற்றும் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Content of Popup

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! மாத்தறையில் சம்பவம்

மாத்தறை,  அக்குரஸ்ஸ - தெதியகல பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சூட்டுக்கு இலக்காகி  பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வீட்டில் இருந்த போது, அவர் மீது இனந்தெரியாத நபர் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தொடர்பில் இதுவரை தகவல் கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Content of Popup

கின்னஸ் சாதனைக்கு வெலிக்கடை சிறைச்சாலை தயார்

உலகின் மிக நீலமான புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலை களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுவருட வாழ்த்து அட்டையை தயாரிக்கும் பணியில் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலர் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 195 அடி நீலமும் 5 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் புதுவருட வாழ்த்து அட்டை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Content of Popup