சனி, 17 டிசம்பர், 2011

மட்டு களுவாஞ்சிகுடியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

மட்டு.; களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 11.30மணியளவில் களுவாஞ்சிகுடி,விநாயகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கே.சுதாகரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.சி.ஆரியரத்தின தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையினை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் துறைநீலாவணையில் உள்ள வீட்டுக்குச் சென்றபோதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

காரினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வேகமாக வந்த கன்டர் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வாகனத்தில் அடிப்பட்டு நீண்ட தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த சார்ஜன்ட் தர அதிகாரி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தர அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் தொடர்புடைய கன்டர் வாகனம் மற்றும் கார் சாரதிகளை கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக