வியாழன், 28 ஜூலை, 2011

சம்மாந்துறை, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்றில் 100 நாட்களுக்குள் வீடுகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட 81 குடும்பங்களிற்கு வீடுகளைக் கட்டுவதற்கான கட்டிடப் பொருட்கள் இன்று சம்மாந்துறை, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்று ஆகிய மூன்று இடங்களில் வைத்து இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இவ்வீடுகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் அமைக்கப்படவுள்ளது. இதன் முதலாவது வைபவம் சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 34 தமிழ், முஸ்லிம் குடும்பங்களிற்கான பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்பிற்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரேரா, 23 வது படைப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மஹிந்தமுதலிகே, 32வது படைப் பிரிவின் பொறுப்பதிகாரி கேர்ணல் குணசுமண, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் லியாக்கத் அலி, சம்மாந்துறை மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.எல்.ரஹ்மதுல்லாஹ், கல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மசூட், பொலிஸ் அதிகாரி எம்.சம்சுதீன் உட்பட இராணுவத்தினர், பொலிசார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக