ஞாயிறு, 4 அக்டோபர், 2009

நெடுமாறன் , வைகோ, சீமான் அவர்களின் அறிக்கையின் சிறீலங்கா தூதரின் மறுப்பும்

வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்


வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்கா துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.
இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளார்.
இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.
பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார்.
அதுவும் தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலம் கடந்தாவது அகதி முகாம்களுக்கு செல்ல முயற்சி நடக்கிறதே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டே இப்படி திமிர்த்தனமாக பேசியுள்ளார். இது தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மேலும் மீனவர் பிரச்சனையிலும், ’இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது” என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.
இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குவைத்திலிருந்து தெரிவித்துள்ளார்.


சிறீலங்கா துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: பழ.நெடுமாறன்

இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைப் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல” என இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கையிலுள்ள முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார்.
இந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கொண்டே, அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு தமிழக முதல்வரை மட்டுமின்றி, ஆறரை கோடி தமிழ் மக்களையும் அவமதிக்கும் போக்காகும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது பற்றி குறிப்பிடும்போது, “”இலங்கை இறையாண்மை உள்ள நாடு; கடல் எல்லையைத் தாண்டி யார் வந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறியிருக்கிறார். எந்த நாட்டுத் தூதரும் இவ்வாறு பேசியதில்லை. எனவே இலங்கை துணைத் தூதரை உடனே வெளியேற்ற வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்திய அரசை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

நெடுமாறன், வைகோ அறிக்கைகளுக்கு சிறீலங்கா துணைத் தூதுவர் மறுப்பு

தாம் கூறிய கூற்றை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை எனறும் நெடுமாறன், வைகோ ஆகியோரின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் சிறீலங்காத் துணைத் தூதர் கூறியுள்ளார்.
‘சிறீலங்காத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் வெளியிடத்தார் சென்று பார்க்கும் விலங்குக்காட்சி சாலைகளல்ல’ என இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததையடுத்து, அவரை உடனும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நெடுமாறனும், ம.தி.மு.க செயலாளர் வைகோவும் கண்டன அறிக்கைகள் விட்டிருந்தனர்.
இதையடுத்து, நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தாம் அவ்வாறு கூறவில்லை என்றும் தமது கூற்றுக்களை முழுமையாக ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் கூறியதோடு, “முகாம்களில் வாழுகின்ற தமிழர்கள் கௌரவமான மக்கள். எனவே அங்கு பல சர்ச்சைகள் இருக்கின்றபோது, ஒரே நேரத்தில் பலர் அடிக்கடி அவர்களைப் பார்க்கச் செல்வது பொருத்தமானது அல்ல” என்றே தாம் கூறியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறீலங்கா இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதே தமது முதன்மையான பணி என்றும், சிறீலங்காவுக்கு தூதுக்குழுவை அனுப்பும்படி தாம் ஏற்கனவே கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.
இதேவேளை, கிருஷ்ணமூர்த்தியை சிறீலங்காவுக்கே திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாண்டியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக