செவ்வாய், 26 ஜூலை, 2011

பண்டமாற்றம் போன்று அகதிகள் கை மாற்றும் - மலேஷியா அவுஸ்திரேலியா ஒப்பந்தம்

மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று கைச்சாத்தாகியுள்ள தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

மலேஷியா அகதிகளை மிக மோசமாகவே பராமரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

தஞ்சங்கோரிகளாக பிடிபடுவர்கள், ஏற்கனவே ஆட்கள் நிரம்பி வழியும் தடுப்பு முகாம்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அனேகமானோர் குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக கடுமையான தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டி ஏற்படுகின்றது.

ஆனால், ஐநாவின் அகதிகள் தொடர்பான சமவாயத்தின் படி, தமக்குள்ள கடப்பாட்டிலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சிக்கின்றது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தாம் அக்கறை எடுக்காதுள்ள, படகுகளில் வந்து குடியேற முயலும் மக்களை அனுப்புவதற்கான ஒரு ஒதுக்குப்புறமாகவே அவுஸ்திரேலியா மலேஷியாவைப் பயன்படுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

மற்ற நாடுகளில் சென்று குடியேறக் காத்திருக்கின்ற சுமார் 93 பேர் வரையில், அனேகமாக பர்மா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அகதிகள், மலேஷியாவில் தற்போது இடைத் தங்கியிருக்கின்றனர்,

இங்கிருந்து தான் மிகவும் அபாயகரமான, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கிய படகுப் பயணத்தையும் பெரும்பாலானவர்கள் ஆரம்பிக்கின்றனர்.

புதிய உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்பை எட்டுகின்ற அடுத்த 800 பேர் மலேஷியாவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.

பதிலுக்கு செல்லுமிடம் தெரியாது, மலேஷியாவில் தடுப்பு முகாம்களிலுள்ள ஆயிரக்கணக்கானோரில், நாலாயிரம் பேரை மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள இருக்கின்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்பாடு, எவரும் தஞ்சங்கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபடுவோரின் வலையமைப்பையும் முறியடிக்க இது உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக